நிதிஷ்-லாலு பாணியில் கூட்டணி... விஜயகாந்த் நிபந்தனையால் திணறும் திமுக
சென்னை: பீகாரில் பரம வைரிகளாக இருந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் இணைந்து சரிபாதியாக தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு சட்டசபை தேர்தலில் களம் கண்டு வென்ற பார்முலாவை கடைபிடிக்கலாமே என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனைகளால் திமுக தலைமை திணறிக் கொண்டிருக்கிறது...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி குறித்த திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் படுஜோராக நடக்கின்றன. தனி கூட்டணி அமைக்கப் போவதாக பாஜக கூறினாலும் மதில் மேல் பூனையாக எப்போது வேண்டுமானாலும் அது அதிமுகவுக்கு தாவிவிடும் நிலையில்தான் இருக்கிறது.
ஆனால் சென்னையில் நிர்வாகிகளிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவோ, அதிமுகவுடன் கூட்டணி அமையாது என்றே கூறிவருகிறார். மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரையை விஜயகாந்த், வாசனை நம்பி காத்துக் கிடக்கிறது.
பாமகவோ யார் வந்தாலும் வராவிட்டாலும் அன்புமணியை முதல்வராக ஏற்றுக் கொண்டு வருபவர்களோடு கூட்டணி என்ற முழக்கத்தோடு பயணத்தைத் தொடர்கிறது. திமுகவோ தேமுதிக, காங்கிரஸ் எப்படியும் நம்முடன் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

விஜயகாந்த்
விஜயகாந்தும் கூட திமுக அணிக்கு போவதில்தான் விருப்பம் காட்டுவதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடம் வெளிப்படையாகி கூறியும் இருக்கிறார். விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக இருப்பதாக நம்பப்படும் எதிர்ப்பு வாக்குகளை திமுகவுடன் சேர்ந்து அறுவடை செய்துவிடலாம் என்பது கணக்கு.

அமைச்சரவை ஆசை
இதன் மூலம் கணிசமான இடங்களைப் பெறுவதுடன் ஒருவேளை திமுக அணி வென்றால் அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும் என்பது விஜயகாந்த்தின் 'ஏறுமுக' கணக்கு... கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிடம் 41 இடங்கள் (ஜெயலலிதா மாதிரியே விஜய்காந்துக்கும் நியூமராலஜி நம்பிக்கை உண்டு, அவரது ராசி எண் 5. அதனால் தான் 41 தந்தார் ஜெயலலிதா, அதாவது கூட்டுத் தொகை 5) வாங்கிய நிலையில் இம்முறை திமுக எப்படியும் 50-60 இடங்களைத்தான் தரும் என்பதும் விஜயகாந்துக்கு தெரியாத ஒன்றல்ல..

பப்பாதி....
அதே நேரத்தில் தொகுதி பேரத்தைத் தொடங்கும் போதே எட்ட முடியாத ஒரு எண்ணிக்கையில் இருந்து நியாய கணக்குகளோடு தொடங்குவோம் என்பதும் விஜயகாந்தின் கணக்கு. அதாவது பீகாரில் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் சரிபாதி தொகுதிகளைப் பங்கிட்டு பாஜகவை வீழ்த்தியது போல திமுகவும் தேமுதிகவும் சரிபாதி தொகுதிகளை பங்கிடலாமே என்பதுதான் விஜயகாந்த் விட்ட முதல் தூது..

திமுக நிராகரிக்கும்
இதுநடக்காது என்பது விஜயகாந்த்துக்கும் தெரியும். ஏனெனில் பீகாரில் லாலு பிரசாத் வசம் 18% வாக்கு உள்ளது. ஆனால் தேமுதிகவிடமோ 5% என்கிற தோராய கணக்குதான் உள்ளது. இதை சுட்டிக்காட்டி திமுக சரிபாதி கணக்கை நிராகரிக்கும் என்று தெரிந்தே விஜயகாந்த் இந்த நிபந்தனையை முன்வைத்திருக்கிறார்.

இதுதான் கிடைக்கும்
திமுகவைப் பொறுத்தவரையில் 50 முதல் 60 தொகுதிகளுக்குள்தான் அதிகபட்சமாக தேமுதிகவுக்கு ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. இதில் பாதியாக காங்கிரஸுக்கு 20-25 இடங்களையும் ஒதுக்கிவிட்டு 150 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடுவோம் என கருதுகிறது. அப்போதுதான் அதிக இடங்களை வென்று 'கூட்டணிகளின்' தொந்தரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும் என நம்புகிறது. இந்த அடிப்படையில்தான் தற்போதைய தொகுதி பங்கீட்டு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

நியூமராலஜி
விஜய்காந்தின் நியூமராலஜி விஷயம் அறிந்துள்ள கருணாநிதி, தேமுதிகவுக்கு 50 சீட்டுகள் என்று சொல்லி அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.
ஏற்பாரா கேப்டன் என்பது விரைவில் தெரியும்!












Click it and Unblock the Notifications