விஜயகாந்த்-ஜவடேக்கர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே.. தேமுதிக அறிக்கையால் பாஜக அதிர்ச்சி
சென்னை: தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேக்கர்-விஜயகாந்த் நடுவேயான சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்காத தேமுதிக, இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ளது. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுடன் பல கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கும் திட்டத்தோடு நேற்று சென்னை வந்தார் பிரகாஷ் ஜவடேக்கர்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய ஜவடேக்கர் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார். தமிழிசை சவுந்தர் ராஜனும் உடன் வந்திருந்தார்.
விஜயகாந்த்-ஜவடேக்கர் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஊடகங்களும் இந்த சந்திப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. எனவே பாஜகவோடு தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அடுத்த வாரம் மீண்டும் சென்னை வருவதாகவும், அப்போது கூட்டணி பற்றி முடிவு இறுதியாகும் என்றும் ஜவடேக்கர் தெரிவித்தார். மேலும், விஜயகாந்த்துடன் நடந்த பேச்சு வார்த்தை திருப்தியளித்ததாகவும் ஜவடேக்கர் கூறினார்.
இந்நிலையில், ஜவடேக்கர் பேட்டியளித்த அரை மணி நேரத்திற்குள் தேமுதிகவிடமிருந்து வெளியான அறிக்கை, பாஜகவினரை தூக்கி வாரிப்போடச் செய்வதாக அமைந்தது. அந்த செய்திக்குறிப்பில், விஜயகாந்த்தை, ஜவடேக்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளது.
ஜவடேக்கருடன் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில், அதை அவசர கதியில் தேமுதிக மறுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பாஜக-தேமுதிக இடையே கூட்டணி பற்றிய உடன்பாட்டில் விஜயகாந்த்துக்கு சம்மதம் இல்லாததை காட்டுவதாக தெரிகிறது.
பிற கட்சிகளோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திவருவதை பாஜக அமைச்சருடான பேச்சு வார்த்தை கெடுத்துவிட கூடாது என்ற கவனத்தோடு விஜயகாந்த் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications