கட்டிய பணத்தை திரும்பக் கொடுங்க... விஜயகாந்தை நெருக்கும் தேமுதிக மாசெகள்!
சென்னை: வரும் தேர்தலில் தனித்துப் போட்டி.. நானே முதல்வர்.. ஆதரிப்பவர்கள் பின்னே வாருங்கள்.. என விஜயகாந்த் முழங்கியது ஒரு பக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், 'இது வெற்றியைத் தருமா' என்ற சந்தேகம் தேமுதிக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
இதன் விளைவை கடந்த இரு தினங்களாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மாவட்ட செயலாளர்கள், முக்கியமான நிர்வாகிகள் ஆகியோர் திரண்டு வந்து, 'முதல்வர் வேட்பாளர் கேப்டனாகவே இருக்கட்டும். ஆனால் முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வாருங்கள்' என கருத்துக் கூறி வருகிறார்கள்.
அவர்கள் இந்த அளவு பதறுவதற்கு முக்கிய காரணம், பெரும் பணம்.
ஆம். தேர்தலில் நிற்க சீட் கேட்கும் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ 35 லட்சத்திலிருந்து (பெண்கள், ரிசர்வ் தொகுதிகளுக்கு), 80 லட்சம் வரை கட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாராம் விஜயகாந்த். எப்படியும் திமுக கூட்டணி உறுதி என்ற நம்பிக்கையில் பலரும் ரூ 35, 50, 60 லட்சங்கள் என சக்திக்கேற்ப கட்டியுள்ளார்களாம். இந்தத் தேர்தலை தனித்துச் சந்திக்க விஜயகாந்துக்கு பெரும் பலமே வேட்பாளர்கள் தந்திருக்கிற இந்தப் பணம்தான்.
இப்போது தனித்துப் போட்டி என்ற விஜயகாந்தின் முடிவால் பணம் கட்டிய பலரும் கலக்கத்தில் உள்ளார்களாம். பலர் தங்களுக்கு இந்த முறை சீட் வேண்டாம். பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்று தலைமை அலுவலகத்தில் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்துள்ளார்களாம்.
விஜயகாந்த் தரப்போ, எம்எல்ஏ சீட் கிடைக்காவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் சீட் உண்டு. அதுவரை பணம் கேட்காதீர்கள் என்று சமாதானப்படுத்தி வருகிறார்களாம். ஆனால் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லாத பெரும்பாலான வேட்பாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதில் குறியாக உள்ளார்களாம்.
'இந்த மாத இறுதி வரை காத்திருங்கள். அதன் பிறகும் பணம்தான் திரும்ப வேண்டும் என்றால் வாருங்கள், திரும்பத் தருகிறோம்,' என்று கூறி அனுப்பி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications