மத்திய அரசை விமர்சிக்காத தே.மு.தி.க: பா.ஜ.க. அணியில் நீடிக்க 'கேப்டன்' விருப்பம்?
கோயம்புத்தூர்: தே.மு.தி.க.வின் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனம் எதுவும் இடம்பெறாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கவே விஜயகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.. பா.ம.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. ஆனால், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 2வது இடத்தை பிடித்திருந்தது.

மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி அமையும் என ஏற்கனவே பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், இப்போது, அக்கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. விலகியுள்ளது. இதையடுத்து, பா.ம.க. தன் நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே சமீபத்தில் சென்னைக்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை அன்புமணி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மட்டும் சந்தித்தனர். தே.மு.தி.க.வினர் யாரும் அவரை சந்திக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா பேசியிருப்பது, தே.மு.தி.கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை தே.மு.தி.க. விமர்சிக்கவில்லை. இதனால், கூட்டணியில் நீடிக்கவே தே.மு.தி.க. விரும்புவதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications