கருணாநிதி உடல்நலம் விசாரிக்க வந்த வைகோ வாகனம் மீது தாக்குதல்.. திமுகவினர் அநாகரீகம்
கருணாநிதியை சந்திக்க வந்த வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வைகோ வாகனம் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் காவேரி மருத்துமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக வியாழக்கிழமையன்று மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி உடல்நலம் குறித்து இன்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று நேரில் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்தநிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருணாநிதியை சந்திக்க ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்தார் இன்று மாலை வந்தார். அப்போது மருத்துவமனை முன்பு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் வைகோவின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கருணாநிதியை சந்திக்காமலே வைகோ திரும்பிச் சென்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.