லோக்சபா தேர்தலுக்கு அழகிரியிடம் ஆதரவு கேட்கப் போகும் மதுரை வேலுச்சாமி
மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் மு.க.அழகிரியிடம் ஆதரவு கேட்போம் என மதுரை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி கூறியுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது:
'கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது மதுரைக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த சாதனைகளைக் கூறி நாங்கள் ஓட்டு கேட்போம். மு.க.அழகிரி உள்பட அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கேட்க உள்ளோம்.
நான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வெற்றி பெற்றால் மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தி, அவற்றை செயல்படுத்துவேன்'' என்றார்.
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, மு.க.அழகிரி தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். லோக்சபா தேர்தலில் பணம் உள்ளவர்களுக்கே சீட் வழங்கப்படுகிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மூன்றாவது இடத்தைதான் பெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேலுச்சாமி, மு.க.அழகிரியிடம் ஆதரவு கேட்போம் என தெரிவித்துள்ளார். திமுக தலைமை இதனை ஏற்குமா?