பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்து தங்க மெடல் வாங்கியது திமுக குடும்பம்- ஸ்டாலினை பிராண்டிய தினகரன்
பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்து தங்கமெடல் வாங்கிய குடும்பம் திமுக என அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு ஆகியவற்றை காவு கொடுத்துவிட்டதாக ஸ்டாலினுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக குடும்பம் பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்து தங்க மெடல் வாங்கியது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள டிடிவி.தினகரன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தனது அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு' என்று குற்றவாளிக் கூடாரத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
விஞ்ஞானத் திருடர்கள்
விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் என்பதும்; எங்கே அந்த சர்க்காரியா விசாரணை அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என்று அஞ்சி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் காலைப் பிடித்து, கூடவே கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளையெல்லாம் காவு கொடுத்து, தங்களை தற்காத்துக் கொண்டவர்கள் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
குற்றங்களின் தலைமைப் பீடம்
நீரில் ஒரு ஊழலென பழைய வீராணத்திலும்; நெருப்பில் ஒரு ஊழல் நிலக்கரி இறக்குமதியிலும்; காற்றில் ஒரு ஊழல் என பூச்சி மருந்து தெளிப்பதிலும்; நிலத்தில் ஒரு ஊழலென மஸ்டர் ரோல் உள்ளிட்ட ஏராள ஊழல்களிலும்; ஆகாயத்தில் ஊழல் என அலைக்கற்றையிலும், இப்படி பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து லஞ்ச லாவண்யங்களில் தங்க மெடல் வாங்கிய குடும்பம் யாருடைய குடும்பம் என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் அறிவார்கள். மேலும், இத்தகைய ஊழல் குற்றங்கள் மட்டுமல்லாமல், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பம், பெரம்பலூர் சாதிக் என பரிதாப உயிர்களையெல்லாம் பரலோகம் அனுப்பிய படுபாதகக் குற்றங்களின் தலைமைப் பீடம் எது என்பதையும் மக்கள் அறிவார்கள்.
உயர்நீதிமன்றம் குட்டு வைத்தது
ஆதலாலே, தண்டனை பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகளும் அல்ல; தப்பித்துக் கொண்டவர்கள் எல்லோரும் நிரபராதிகளும் அல்ல என்பதை உலகம் அறியும். அப்படியிருக்க, திருவாளர் ஸ்டாலின் போடுகிற ஜீவகாருண்யர் வேஷத்தை அவருடைய கட்சியினரே பார்த்து குலுங்கித்தான் சிரிப்பார்கள். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதி போதனை வகுப்பெடுக்கும் திருவாளர் ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. குண்டர்களுக்கு கறுப்பு-வெள்ளை சீருடை அணிவித்து, அதிகாலை 8 மணிக்கே வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி மொத்த ஓட்டுக்களையும் தமக்குத்தாமே குத்திப் போட்டுக்கொண்டு வெற்றி பெற்றோம் என அறிவிக்க, பிறகு சென்னை உயர்நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்து, ஒட்டுமொத்தத் தேர்தலுமே செல்லாது என அறிவித்தது. இதன்மூலம் தமிழக தேர்தல் சரித்திரத்தில் இதுவரை யாரும் எதிர்கொள்ளாத தலைக்குனிவை வாங்கிக் கட்டிக்கொண்டது இவரும், இவருடைய கட்சியினரும் தான் என்பதை வரலாறு அறியும்.
துருப்பிடித்த தகரங்களுக்கு இல்லை
ஆதலாலே, ஒரு துரோகியோடு ஒப்பந்தம் போட்டு எங்கள் கருணைத் தாய் கட்டி எழுப்பிய அதிமுக அரசை கவிழ்த்துவிடலாம் என்று இந்த செயல் தலைவர் தீட்டிய திரைமறைவு திட்டங்களெல்லாம் கைகூடாது போன நிலையில், ஒரு ஓபிஎஸ்-ஐ தூக்கி எறிந்துவிட்டு, ஒரு இபிஎஸ்-ஐ கொண்டு வந்து அதிமுக ஒரு அரசியல் மாற்றத்தை அமைதிப் புரட்சியாக நிகழ்த்தியதைப் பார்த்து, இந்தச் செயல் தலைவரின் குடும்பத்தினரே இவரது இயலாமையைக் கண்டு எள்ளி நகையாடுவதாக சொல்லப்படும் நிலையில், அதனால் எழும் விரக்தியில்தான் இந்த செயல் தலைவர் தமக்குத் தாமே சட்டையையெல்லாம் கிழித்துக்கொண்டு நடத்திய காமெடி கூத்துகளும் இன்றளவும் மக்கள் சொல்லிச் சொல்லிச் சிரிப்பதாகிவிட்டது. இதனால்தான் தமது இயலாமையை மறைக்க அதிமுகவை மு.க.ஸ்டாலின் வன்மம் நிறைந்த வார்த்தைகளால் வசைபாடி வருகிறார். ஆனாலும், தங்கத்தை தரம் பார்த்துச் சொல்கிற உரிமை உரைகல்லுக்குத் தான் உண்டே தவிர, துருப்பிடித்த தகரங்களுக்கு இல்லை என்பதை இனியாவது திருவாளர் ஸ்டாலின் உணர்ந்துகொண்டு பேசுவதே நல்லது!" இவ்வாறு தினகரன் தனது அறிக்கையில் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.