அரவக்குறிச்சி, தஞ்சையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு பரிசீலிக்கவும்: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக, ஹைகோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய ஹைகோர்ட், முன்கூட்டியே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வரும் 27ம் தேதிக்குள் பரிசீலனையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி, கடந்த 16ம் தேதி தமிழகத்தின் பிற சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின்போது அவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.

மே 23ம் தேதி இவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அப்போது, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்க கோரி ஹைகோர்ட்டில், 5 பேர் தாக்கல் செய்த மனுவிற்கு நேற்று, பதிலளித்த தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை மேலும் 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்க உள்ளதாக கூறியது.
பிறகு இரவில் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பிட்டபடி, மே 23ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக மனுவில் கோரப்பட்டது. இதை அவசர வழக்காக கருத்தில் கொண்டு இன்று மதியமே விசாரணை நடத்த ஹைகோர்ட் ஒப்புக்கொண்டது.

மதியம் 3 மணியளவில் மனு விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 13ம் தேதிக்கு முன்பாக தேர்தலை நடத்த முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். இதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இம்மாதம் 27ம் தேதிக்குள்ளாக இந்த பரிசீலனையை முடித்து தேர்தல் ஆணையம், பதிலளிக்க வேண்டும் எனவும், திமுக உள்ளிட்ட அனைத்து தரப்பு கருத்துக்களையும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications