ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : காவல்துறை ஆணையரிடம் தி.மு.க புகார்
ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தி.மு.க சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மற்றும் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருதாக தி.மு.க சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.கே நகருக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நேற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. தீவிர பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட மனுவில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்களும், டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களும் ரகசியமான வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். பல இடங்களில் போலீஸாரும் இதற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும், ஏற்கனவே போலீஸாரிடம் மனு கொடுத்தும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் , தேர்தல் நடத்தும் அதிகாரி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் என்பதால் அவரும் இதை தடுக்காமல் இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் தரப்பினர் சார்பில் ஆர்.கே நகர் தொகுதியில் 50,000 குக்கர்கள் வந்து இறங்கி இருப்பதாகவும், அதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.