திமுக அல்லது அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வராது: அன்புமணி ஆரூடம்
தூத்துக்குடி: அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லாத ஆட்சி அமையும் என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தென்மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியிலுள்ள ரெசார்ட் ஒன்றில் நடந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க ஆலோசனை வழங்கிய அன்புமணி, ஒவ்வொருவருக்கும் தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதன்பிறகு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி: இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. அதற்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஐ.நா மன்றத்தில் ராஜபட்சேவை பேச விடக்கூடாது என்கிற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொருத்தவரை திறமையில்லாத ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் மின் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு, இப்போதும் உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என ஏமாற்று வித்தை காண்பிக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தினார்கள். இப்போது உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்த கையோடு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தவறெல்லாம் செய்துவிட்டு எல்லாமே நன்றாக இருப்பதுபோல் மாய தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்.
நான் நேற்று திருச்செந்தூருக்கு போய் வந்தேன். இடையில் ஆத்தூர் வழியாக ஓடும் தாமிரபரணி ஆற்றை பார்த்தேன். அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், இதே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் பாலைவனம் போலவும் காட்சியளிக்கிறது. எனவே வீணாக போகும் நீரை முறையாக பயன்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம். அந்த மாதிரி எதாவது இதுவரை இருந்த தி.மு.க., அதி.மு.க. அரசுகள் செய்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
வருங்காலங்களில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் இவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். புதிய ஆட்சி வரவேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் இந்த இருகட்சிகளும் இல்லாத புதிய ஆட்சி தமிழகத்தில் மலரும். எந்த கட்சியெல்லாம் இதில் இடம் பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications