எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்கிறதா காட்பாடி? திகு திகு திண்டுக்கல்- திமுகவில் சலசலப்பு!
எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய விவகாரத்தை சரியாக கையாளவில்லையே என்கிற ஆதங்கம் திமுகவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய விவகாரத்தை கட்சி சரியாக கையாளவில்லையே என்கிற ஆதங்கம் திமுகவின் மூத்த தலைவர்களிடம் இருப்பதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் ஸ்டாலின் உள்ளிட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டனர். அன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, 2 முறை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தது சட்டப்படி தவறானது; இதை வைத்து நாம் வழக்கு தொடரலாம் என வலியுறுத்தியிருக்கிறார்.

திகு திகு திண்டுக்கல்
ஆனால் 'காட்பாடி' பிரமுகரோ அதெல்லாம் இருக்கட்டும்; அதெல்லாம் வேண்டாம் என திரும்ப திரும்ப கூறியிருக்கிறார். இதில் கடுப்பாகிப் போன திண்டுக்கல் பிரமுகர் அறிவாலயத்தின் கீழ் தளத்துக்கு வந்து எடப்பாடிக்கு காட்பாடி முட்டுக் கொடுக்கிறாரோ என கொந்தளித்திருக்கிறார்.

சட்டத்துறை மீது அதிருப்தி
இதேபோல் திமுகவின் சட்டத்துறை மீதும் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு உத்தரவை வாங்கியிருக்க முடியும். அதை செய்யாமல் வெறுமனே ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினால் சபாநாயகர் நிராகரித்தான் செய்வார் எனவும் குமுறல்கள் வெளிப்படுகிறது.

செயலற்றதா?
அத்துடன் கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் மருத்துவமனையில் இருந்த நிலையில் அவரையும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதாக சேர்த்தது தவறு என ஆளுநரிடம் வாய்மொழி புகாரைத்தான் திமுகவினர் தெரிவித்தார்களாம். கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து ஆதாரப்பூர்வமாக புகார் தருவதற்கு கூட திமுக சட்டத்துறை செயலற்று போய்விட்டதா? என்கிற கொந்தளிப்பும் வெளிப்படுகிறது.

யோசிக்கலையே..
மேலும் அதிமுக மற்றும் ஆட்சியின் ஒவ்வொரு நகர்வையும் திமுக தலைவர் கருணாநிதி முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவார். ஆனால் தற்போது அப்படியான ஒரு நிலைமை இல்லை என்பதைத்தான் சட்டசபை சம்பவங்கள் காட்டுகின்றன எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் திமுக மூத்த தலைவர்கள். சரி அப்படி முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லை என்றாலும் கூட சட்டசபையில் ஒட்டுமொத்தமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமைதி காக்கும்போதே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என யூகித்து அதற்கேற்ப வியூகம் வகுத்து செயல்பட வேண்டாமா? என்கிற கேள்வியையும் திமுக நிர்வாகிகள் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications