தேர்தலை பற்றி பேசும் திமுக சட்டசபையில் என்ன செய்யும்? ஓபிஎஸ்-க்கு ஆதரவு தருமா?
சென்னை: தேர்தலுக்கு தயாராகுங்கள் என அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் திமுக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் என்ன செய்யும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசகர் ராவ் அழைத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது.
அதேநேரத்தில் ஓபிஎஸ்ஸும் தம்மால் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க முடியும் என வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளது.
இதன்படி சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் 89 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதில்தான் க்ளைமாக்ஸ் இருக்கிறது. வெளியில் தேர்தலுக்கு தயாராகுங்கள் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
ஆனால் ஓபிஎஸ் தரப்போ, சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால் நிச்சயம் திமுக தம்மை ஆதரிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறது. இதை ஆளுநரிடமும் உறுதியாக தெரிவித்துள்ளது.
திமுகவும் கூட என்னதான் தேர்தலை சந்திக்கலாம் என கூறி வந்தாலும் மத்திய பாஜக அரசு நெருக்கடியால் வேறுவழியில்லாமல் சட்டசபையில் ஓபிஎஸ் தரப்பை ஆதரிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.