நடத்தையில் சந்தேகம்... மனைவி, மகள் அடித்துக் கொலை: மளிகைக் கடைக்காரர் கைது
தூத்துக்குடி: மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியையும், 3 வயது மகளையும் கோடூரமாக அடித்துக் கொலை செய்த தூத்துக்குடி மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் கோகிலா (26). இத்தம்பதியின் 3 வயது மகள் புவனா.
மளிகைக்கடையில் காய்கறிகளையும் விற்பனை செய்து வரும் சங்கர், அதிகாலையில் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அப்போது கடையை கோகிலா கவனித்துக் கொள்வார்.
இந்நிலையில் நேற்று காலை காய்கறிகள் வாங்க மார்க்கெட் சென்ற சங்கர், மீண்டும் 7.30 மணியளவில் கடைக்கு திரும்பியுள்ளார். ஆனால், அப்போது கோகிலா கடையில் இல்லாததால் அதிர்ச்சிய்டைந்த சங்கர் அவரைத் தேடி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கோகிலா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் இது தொடர்பாக கோகிலாவிடம் சண்டை போட்டுள்ளார்.
கேஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளதாகக் கூறி இவர்களது சண்டையை விலக்கி வைக்க முயன்ற அக்கம்பக்கத்தினரையும் விரட்டியுள்ளார் சங்கர். பின்னர், கிரைண்டர் கல்லை எடுத்து கோகிலாவின் தலையில் தாக்கியுள்ளார் சங்கர். இதில், பலத்த காயமடைந்த கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெற்றோரின் சண்டையைக் கண்டு அழுது கொண்டிருந்த குழந்தை புவனாவையும் கோபத்தில் சுவற்றில் தூக்கி அடித்துள்ளார் சங்கர். இதில் பலத்த காயமடைந்த அக்குழந்தையை அக்கம்பக்கத்தார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் மறைந்திருந்த சங்கரைக் கைது செய்தனர். கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கரின் அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் படி, சங்கர் அடிக்கடி தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டை போட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கோகிலா கடைசியாக யாரிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.