சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவு- கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் இரங்கல்
சென்னை: சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் அதிபராக இருமுறை பதவி வகித்த தமிழர் எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கை :
சிங்கப்பூர் நாட்டில் 1999 முதல் 2011 வரை இரண்டு முறை அதிபராக இருந்து, நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவரும், "சிங்கப்பூரின் தந்தை" என்று போற்றப்படும் "லீ க்வான் யு"வின் நெருங்கிய நண்பரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மலேசியாவிலும், அமெரிக்காவிலும் சிங்கப்பூரின் தூதராக சிறப்பாக பணியாற்றியவருமான எஸ்.ஆர்.நாதன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து அதிலிருந்து மீளாமலே மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

எஸ்.ஆர். நாதன் பல்வேறு பொறுப்புக்களில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். தொழிற்சங்கத்திலும் ஈடுபாடு கொண்டு, தொழிலாளர்களின் உயர்வுக்காக உழைத்தவர். அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கும், எஸ்.ஆர். நாதனின் குடும்பத்தினருக்கும் தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில், புலம் பெயர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், இளம் வயதில் வறுமை காரணமாக வேலைபார்த்துக் கொண்டே படித்தவர்.
மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாதன், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் என்ற நிலைக்கு உயர்ந்தார். 1999ம் ஆண்டில் சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நாதன், 2011 வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது, அதனால் சிங்கப்பூர் பாதிக்கப்படாமல் காத்ததுடன், தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயனிக்கவும் எஸ்.ஆர். நாதன் உத்திகளை வகுத்துக் கொடுத்தார்.
சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சிங்கப்பூர் குடிமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications