ஜெயலலிதா கேள்வியால் சட்டசபைக்குள் கலகலவென சிரித்த துரைமுருகன்.. தப்பா என்கிறார் ஓ.பி.எஸ்
'துரைமுருகன் நீங்க நடிப்புத்துறைக்கு போயிருந்தா மிகப்பெரிய நடிகரா ஆகியிருப்பீங்க'' என்று ஜெயலலிதா சொன்னார். இதைக்கேட்ட துரைமுருகன் கலகலவென சிரித்தார் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை: துரைமுருகன் ஜெயலலிதாவுடனும் சட்டசபையில் பேசி சிரித்துள்ளார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, அவர் கூறுகையில், "என்னை பொறுத்தவரையில் நான் அஇஅதிமுகவுக்கு எதிராக மறைமுகமாக எந்த இயக்கத்தோடும் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை. இனி எப்போதும் ஈடுபடபோவதும் இல்லை.
மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பு ஜெயலலிதா அவர்களால் இரண்டு முறை முதல் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த மனநிறைவே போதும் என்றுதான், என்னை 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சொன்னபோது முடியாது என்று சொன்னேன்" என்றார்.
சிரித்து சிரித்து பேசினீர்களா?
சட்டமன்றத்தில் ஸ்டாலினுடன் நீங்கள் சிரித்து பேசியதும், துரைமுருகன் உங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதும், சசிகலா உள்ளிட்டோர் உங்கள் மீது குற்றம் சுமத்த வாய்ப்பாகிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், "நான் முதல் அமைச்சராக இருந்தேன். எங்களுக்கு 134 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். திமுக தமிழக நலன்களை கைவிட்டதை சுட்டிக்காட்டி சட்டசபையில் ஆணித்தரமாக பேசியிருக்கிறேன்.
காவிரி, கச்சத்தீவு
காவிரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்பு 2007ல் வழங்கப்பட்டதற்கு பின்னால், 2011 வரை அந்த தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தர முடியவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் 24 மணி நேரத்தில் வாங்கித் தந்திருக்கலாம். வாங்கித்தரவில்லை என்றெல்லாம் நான் பேசியிருக்கிறேன். இதற்கு முன்னால் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூட கச்சத்தீவைப் பற்றி பேசியிருக்கிறேன். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தவறு என்று பேசியிருக்கிறேன்.
துரைமுருகன்
2001 - 2006ல் சட்டப்பேரவையில் முதல் வரிசையில் நான் ஜெயலலிதா அமர்ந்த வரிசையில் அமர்ந்திருந்தேன். எதிரில் முதல் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள். அப்போது துரைமுருகன் அமர்ந்திருந்தார். ஜெயலலிதா பார்த்தபோது துரைமுருகன் சிரித்தார்.
"துரைமுருகன்..." என்று ஜெயலலிதா சொன்னபோது, 'என்னங்கம்மா' என்று கேட்டார் துரைமுருகன். ''துரைமுருகன் நீங்க நடிப்புத்துறைக்கு போயிருந்தா மிகப்பெரிய நடிகரா ஆகியிருப்பீங்க'' என்று ஜெயலலிதா சொன்னார். இதைக்கேட்ட துரைமுருகன் கலகலவென சிரித்துவிட்டு, 'அம்மா நாங்க என்ன கேள்வி கேட்டாலும் உடனே நீங்க பிங்கர் பாயிண்ட்ல வைச்சு பதில் சொல்றீங்கம்மா. நிறைய படிக்கிறீங்கம்மா' என்று கேட்டார். இதையெல்லாம் நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.