1 முட்டை ரூ.3.50க்கு கிடைக்கிறது, 'மக்களின் முதல்வர்' அரசு அதை ஏன் ரூ.5க்கு வாங்குகிறது?
திண்டுக்கல்: காங்கிரஸில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள் ஒதுங்கி போய் விட்டனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாலில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள் ஒதுங்கி போய் விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் வாசனுக்கு ஆட்களை சேர்த்து கொண்டிருக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தியதில் மூப்பனாருக்கு எந்த பங்கும் இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெளியேறியதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் இருக்கிறது என்று கூறுவது கட்டுக்கதை ஆகும். 2016 சட்டமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்குரிய ஓட்டுகளை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் சில்லறை விலைக்கே, ஒரு முட்டை ரூபாய் 3.50 க்கு கிடைக்கிறது. ஆனால் மொத்த விலைக்கு ஒரு முட்டையை ரூபாய் 5 க்கு தமிழக அரசு வாங்குகிறது. இது தொடர்பான எனது கேள்விகளுக்கு, தமிழக அரசு இதுவரை பதில் சொல்லவில்லை. தமிழக அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்பு, உற்பத்தி திறன் ஆகியவற்றை பற்றி புள்ளி விவரங்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் சொல்லவில்லை.
மது என்னும் அரக்கனால் தமிழக மக்கள் பாழாகி கொண்டிருக்கின்றனர். டாஸ்மாக்கில் நடக்கிற ஊழலால் பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது. பிற கட்சிகளை காட்டிலும் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தேர்தல் காலத்தில் நம்முடைய திட்டங்கள், சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லாமல் விட்டு விட்டதே நமது தோல்விக்கு காரணம் ஆகும்.
பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர், முதியோர் என அனைவரும் மோடியின் வாக்குறுதியை நம்பும்படியாக இருந்தது. தற்போது மக்கள் புரிய ஆரம்பித்து விட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை" என்று கூறியுள்ளார்.
முட்டை கொள்முதலில் பெரும் அளவில் ஊழல் நடந்து வருவதாக அனைத்துக் கட்சிகளும் கூறி வந்தாலும் இதுவரை அதற்கு மக்களின் முதல்வர் அரசிடம் இருந்து பதிலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.