முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நிமிடத்திலும் ராஜினாமா? மீண்டும் சிஎம் நாற்காலியில் ஓபிஎஸ்!
முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எந்த நிமிடத்திலும் ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எந்த நிமிடத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்படுகிறது. மீண்டும் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்கிறார் என்கின்ற கோட்டை வட்டாரங்கள்.
அதிமுகவின் சசிகலா கோஷ்டி உடைந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய கோஷ்டி உதயமாகியுள்ளது. ஓபிஎஸ் கோஷ்டியுடன் இணைவதற்காக சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி ராஜினாமா?
இதைத் தொடர்ந்து டெல்லியின் நெருக்கடிக்கு பணிந்து முதல்வர் பதவியையும் விட்டுத்தரவும் எடப்பாடி பழனிச்சாமி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டெல்லி எச்சரித்ததையடுத்தே இந்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ளாராம்.
முதல்வராகிறார் ஓபிஎஸ்
இதையடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை எப்படிப் பெறுவது என்பது தொடர்பான குழப்பம் எடப்பாடி கோஷ்டியிடம் இருக்கிறதாம்.
அமைச்சரவை மாற்றம் இல்லை?
மேலும் ஓபிஎஸ் கோஷ்டி கேட்பது போல உடனடியான அமைச்சரவை மாற்றத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒப்புக் கொள்ளாமல் இழுத்தடித்து வருகிறதாம். இது குறித்து டெல்லியிடம் ஓபிஎஸ் கோஷ்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
5 இலாகாக்கள்
ஓபிஎஸ் கோஷ்டி தரப்பி நிதித்துறை உட்பட 5 முக்கிய இலாகாக்கள் கேட்கப்படுகிறது. இதையும் விட்டுத்தர வேண்டுமா? என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியின் ஆலோசனையாக இருக்கிறதாம்.