சிவகாசி பட்டாசு கிடங்கு விபத்து: புகையில் மூச்சுத் திணறி 9 பேர் மரணம்- விருதுநகர் ஆட்சியர்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள். பட்டாசு புகையில் மூச்சுத் திணறியே இவர்கள் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறியுள்ளார்.
சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மினிலாரி ஒன்றில் பட்டாசு பண்டில்கள் ஏற்றப்பட்டன. திடீரென உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட தீப்பிழம்பு அருகிலிருந்த ஸ்கேன் சென்டருக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அலறித்துடித்தனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கிடங்கிற்கு அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இறந்தவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. அவர்களில் வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ணகுமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி என தெரியவந்துள்ளது. உயிரிழந்த 9 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் சிகிச்சை பெற வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஸ்கேன் சென்டரில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரையும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவஞானம், பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ஆட்சியர் சிவஞானம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications