For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் நிவாரணப் பொருட்கள், கண்டுகொள்ளாமல் இருக்கும் ஜெ.: ஈவிகேஎஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதவதற்காக 3 கப்பல்கள் மூலம் 150 டன் உணவுப் பொருட்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை துறைமுகத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்த நிவாரணப் பொருட்களை பெறுவதற்கு ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

செம்பரபாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து முன்னறிவிப்பின்றி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அடையாறு, நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவார மணல் அடைப்பை தமிழக அரசு தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீர் கடலுக்குள் செல்ல முடியாமல் சென்னை மாநகரை பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் 15 அடி உயரத்திற்கு மேல் நீர் பெருக்கெடுத்ததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் புகுந்து மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக தெருக்களில் நின்று கொண்டு உதவிக்காக ஏங்கி நின்ற கொடுமையை விட வேறொரு கொடுமை இருக்க முடியாது.

Elangovan slams Jayalalithaa

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகம் செல்லவில்லை. தலைமை செயலகம் கடந்த டிசம்பர் 2, 3 ஆகிய நாள்களில் வெறிச்சோடியிருந்தது. சென்னை மாநகராட்சி செயல்படாத முடங்கிய நிலைக்கு சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எவருக்கும் கிடைக்கவில்லை. ஆறுகளில் சடலங்கள் மிதந்து கொண்டிருந்த கொடுமையை பார்க்க முடிந்தது. உலகத்தரம் வாய்ந்த மியாட் மருத்துவமனையில் மின்வெட்டு காரணமாக மாற்று ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் 18 பேர் பிராண வாயு இல்லாமல் இறந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதை பார்க்க முடிந்தது.

சில நாட்களுக்கு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு ரூபாய் 940 கோடி வழங்கியது. ஆனால், இந்த நிதி சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிக்காக வழங்கபடாமல், ஏற்கனவே, தரவேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூபாய் 388 கோடியும், 14 வது நிதிக்குழுவினால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ரூபாய் 552 கோடியும் வழங்கப்பட்டதே தவிர, வெள்ளநிவாரண நிதியாக ரூபாய் 940 கோடி வழங்கப்படவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் வேதனை அடைய செய்கிறது. மத்திய பாஜக அரசின் இத்தகைய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலைப் போல வேறு எந்த அரசும் செய்ய முடியாது. எனவே, தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லையெனில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகிற நிலை ஏற்படும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு வரலாறு காணாத ஒன்றாகும். இதுவரை இத்தகைய கடுமையான பாதிப்பை தமிழக மக்கள் சந்தித்து இல்லை. இந்த பாதிப்பிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கிற நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவினால் எடுக்க முடியுமா? என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது.

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தான், தமது சொந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு காரிலேயே சென்று மண்ணில் கால்படாமல் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தார். தற்பொழுது, ஹெலிகாப்டர் மூலமாக, பாதிக்கப்பட்ட 45 லட்சம் சென்னை மாநகர மக்களை 45 நிமிடத்தில் பார்த்ததை விட கண்துடைப்பு நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதவதற்காக 3 கப்பல்கள் மூலம் 150 டன் உணவுப் பொருட்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை துறைமுகத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்த நிவாரணப் பொருட்களை பெறுவதற்கு ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை. இது குறித்துக் கூறிய கடற்படை

அதிகாரி மிகுந்த வேதனையோடு நிவாரணப் பொருள்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிப் போகிறதே என்று வேதனைப்பட்டுள்ளார். இது குறித்து முடிவெடுக்க ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லையென்று அதிகாரிகள் குமுறிக் கொண்டுள்ளார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய உணர்வோடு நூற்றுக்கணக்கான வாகனங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பொருட்களை, பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புவதற்கான ஒருங்கிணைப்பைக் கூட ஜெயலலிதா அரசால் செய்ய முடியாதது வெட்கக்கேடானதாகும். வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பாதிப்பை விட ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்குக் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களது உயிர்களையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இதற்கான பொறுப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மக்கள் பாதுகாப்பற்ற முறையில் அச்சத்துடனும், பதட்டத்துடனும் என்ன நடக்கப் போகிறதோ என்று அஞ்சி, அஞ்சி வேதனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, வெள்ளநிவாரண நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முறையாக செய்யுமா என்கிற அச்சம் நமக்கு ஆழமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முன்னின்று செய்வதற்கு முன்வருவதன் மூலமாக மக்களின் துயரத்தை நிச்சயமாக தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மிகச்சோதனையான காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தலையாய பணியாக அனைவரும் கருதி செயல்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தங்கவைத்து, உணவு வழங்கி பராமரிக்கிற பணியை கடந்த 3 நாட்களாக செய்து வருகிறோம்.

சென்னை மாநகரில் வாழ்கின்ற வட இந்தியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் செய்து வருகிற நிவாரண உதவிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பள்ளிவாசலை திறந்து ஏழை, எளிய மக்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது நமக்கு மிகுந்த மன ஆறுதலைத் தருகிறது. அதே போல, கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது தேவாலயங்களை திறந்து மக்களை தங்க வைத்து நிவாரண உதவிகளை செய்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே உதவி செய்கிற அணுகுமுறை மூலமாக, இயற்கையின் சீற்றத்திலிருந்து மக்களை நிச்சயமாக காப்பாற்ற முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
TNCC president EVKS Elangovan said that CM Jayalalithaa doesn't even take measures to distribute the relief materials that reached Chennai in three ships.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X