திருச்சி சிறையில் பெண், ஆண் கைதிகளுக்கு தினமும் நிர்வாண சோதனை...நெடுவாசல் மாணவி 'திடுக்' புகார்
திருச்சி சிறையில் தினமும் பெண் மற்றும் ஆண் கைதிகள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஜாமீனில் வெளிவந்த மாணவி வளர்மதி புகார் தெரிவித்துள்ளார்.
திருச்சி: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியதால் மாணவி வளர்மதி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், சிறைக்குள் தினமும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தி துன்புறுத்தப்படுவதாக திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க கடந்த 15ம் தேதி ரயிலில் வந்த கோவையை சேர்ந்த மாணவர் அமைப்பான சமூக விழிப்புணர்வு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள் வளர்மதி, ஸ்வாதி ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
இதில் வளர்மதியை மட்டும், போலீசார் கடந்த 16ம் தேதி தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நிலையில், வளர்மதிக்கு நேற்று முன்தினம் குளித்தலை ஜேஎம்2 கோர்ட் ஜாமீன் வழங்கியது. நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி,"நெடுவாசல் போராட்டத்துக்கு வந்தபோது 30 போலீசார் சூழ்ந்து எங்களை விசாரிக்க வேண்டும் என அழைத்து சென்று கைது செய்து நள்ளிரவில் சிறையில் அடைத்தனர். சிறைக்குள் காவலர்கள் உடையைக் கழற்றிச் சோதனையிடவேண்டும் என பலமுறை வற்புறுத்தினர். இதற்கு ஒத்துழைக்காததால் என்னை தாக்கி வலுக்கட்டாயமாக எல்லா உடைகளையும் அகற்றி சோதனையிட்டனர். பின்னர், தனிமை சிறையில் அடைக்கப்பட்டேன்.
இதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது சிறை ஊழியர்கள் கண்மூடித்தனமாக என்னைத் தாக்கினர். ஆபாச வார்த்தைகளால் என்னை போலீசார் திட்டினர். நாங்க சொல்வதைக் கேட்கவில்லை என்றால் 'மாவோயிஸ்ட்' என உன்னை முத்திரை குத்திவிடுவோம், என பல்வேறு வகையில் மிரட்டி 10க்கும் மேற்பட்ட போலீசார் சேர்ந்து தாக்கினர்.
எந்தக் கைதியையும் என்னுடன் பேசவிடவில்லை. தினமும் கைதிகளை நிர்வாணமாக நிற்க வைத்து சோதனையிட்டு மனித உரிமை மீறலில் திருச்சி சிறைத்துறை போலீசார் ஈடுபடுகின்றனர். " என்று தெரிவித்தார்.