தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர்: மவுனம் கலைத்த கருணாநிதி
சென்னை: நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் 'நமக்கு நாமே' ரோடு-ஷோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் அவருக்கு ஏகோபித்த அன்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே பயணம் முடிந்ததும் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவார். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன நடந்தது என்பதை என்னிடம் முழு விபரமாக கூறுவார். அவர் சொல்வதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தி.மு.க.வில் எனக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு வருவது யார் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தி.மு.கழகம் ஜனநாயக இயக்கமாகும். இங்கு பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகிறது.
நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுத்து அறிவிப்பது இல்லை. கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளையே அறிவிக்கிறேன்.
கட்சியின் பொதுக் குழுவும், செயற் குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவை நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
2016 சட்டசபை தேர்தலில் 2ஜி விவகாரம் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2ஜி ஒதுக்கீடு வருவாய் இழப்பு வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் தி.மு.க. பாதிப்பு அடையாது என்று உறுதியாக நம்புகிறேன் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.