காங்கிரஸில் சலசலப்பு.. தங்கபாலு ஆதரவு 6 மாவட்ட தலைவர்கள் டிஸ்மிஸ்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி!!
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு ஆதரவு 6 மாவட்ட தலைவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக கட்சிப் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ததால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 23-ந்தேதி திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு கொட்டும் மழையிலும் பேசினார்.
இக் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் செய்திருந்தனர். ஆனால் சில மாவட்ட தலைவர்கள் தொண்டர்களை அழைத்து வரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த 6 மாவட்ட தலைவர்களும் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த 6 மாவட்ட தலைவர்களையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து தமது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 6 மாவட்ட தலைவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மாவட்டப் பொறுப்பாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், திருச்சி வடக்கு, தர்மபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் : #EVKS pic.twitter.com/MW6nd1AKiZ
— EVKS Elangovan (@EVKSElangovan) July 31, 2015
அதன்விவரம் வருமாறு (அடைப்புக் குறிக்குள் நீக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் விவரம்):-
திருச்சி வடக்கு - என்.ஜெயப்பிரகாஷ் (தொட்டியம் இ.எம்.சரவணன்)
தர்மபுரி - ஜே.ராஜாராம் வர்மா (ஏ.வி.எஸ்.இளங்கோவன்)
சேலம் மாநகரம் - எஸ்.பி.மேகநாதன் (ஜி.ஜெயபிரகாஷ்)
சேலம் கிழக்கு - எம்.பெரியசாமி (எஸ்.கே.செல்வராஜ்)
சேலம் மேற்கு - ஏ.என்.முருகன் (பி.கோபால்)
பெரம்பலூர் - வக்கீல் டி.தமிழ்செல்வன் (ஆர்.மதனகோபால்)
இவ்வாறு இளங்கோவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.