இந்தியன் வங்கி முறைகேடு: முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு, 2 ஆண்டு சிறை
சென்னை: போலி ஆவணங்களின் அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு ஐந்தரை கோடி ரூபாய் கடன்வழங்கியதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்த எம்.கோபால கிருஷ்ணன் உள்பட ஆறு பேருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் பொது மேலாளராக எம்.கோபால கிருஷ்ணன் பதவி வகித்தபோது, போலி ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களுக்கு வங்கியில் இருந்து கடன் அளிக்கப்பட்டதாகவும் அதன்மூலம் 5.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னர் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், டெல்லி மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்களான ரஞ்சிவ் பாட்ரா, கிரண் பாட்ரா, இந்தியன் வங்கியின் சென்னை தலைமைக் கிளை மேலாளராக எம்.கோபால கிருஷ்ணன் மற்றும் வங்கி பணியாளர்களான ஸ்ரீனிவாசன், அஜிஸ், ஷண்முக சுந்தரம் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சி.பி.ஐ., வழக்குகளை விசாரிக்கும் நகர குற்றவியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.
முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் வழக்கில் தொடர்புடைய மூன்று வங்கி ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதே போல் கடன் பெற்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 32 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications