அடுத்தடுத்து கைது.. அத்தனையும் அரசு போடும் பொய் வழக்கு.. அசராத திருமுருகன் காந்தி
தன் மீது தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முள்ளிவாய்க்காலில் மாண்ட ஈழத்தமிழர்களுக்கு மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக விடுதலை செய்யாத போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவியது. இது போதாது என்று திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.

ஆண்டு தோறும் அஞ்சலி
உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புழல் சிறை
இதற்கு போலீசார் தடை விதித்தனர். மே 21-ஆம் தேதி தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்
இதனிடையே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது போதாதென்று நேற்று முன் தினம் காவிரி பிரச்சினையின் போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டது.

மீண்டும் கைது
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொய் வழக்கு
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருமுருகன் காந்தியை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் "தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications