ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஹெர்னியா நோயாளியின் வயிற்றில் ‘ஃபேன்’ அறுந்து விழுந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குடல் இறக்கம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நோயாளியின் வயிற்றில் மின்விசிறி அறுந்து விழுந்த சம்பவம் அங்கிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஆரிப் (32) என்பவர் குடல் இறக்கம் (ஹெர்னியா) காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். புதிதாக கட்டி திறக்கப்பட்ட 10 மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் ஆரிப்.
இந்நிலையில், நேற்று தனது வார்டில் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆரிப்பின் வயிற்றில், மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆரிப், மின்விசிறி விழுந்ததால் மேலும் வலியால் துடித்துள்ளார்.
மின்விசிறி கழன்று நோயாளி மீது விழுந்ததைக் கண்டு அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ஆரிப்பிற்கு இச்சம்பவத்தால் காயமேதும் ஏற்படவில்லை. உடனடியாக அவர் வேறு படுக்கைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, மின்விசிறி நோயாளியின் மீது விழவில்லை. கீழே தான் விழுந்தது. இதுபற்றி பொதுப்பணித்துறை என்ஜீனயரிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். மின் விசிறியல் உள்ள ‘பியரிங் சிக்கி கொண்டதால் இந்த சம்பவம் நடத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications