விவசாயிகள் பிரச்சினையை விவாதிக்க திமுக அனைத்துக்கட்சி கூட்டம் - ஸ்டாலின் அழைப்பு
விவசாயிகள் பிரச்சினையை விவாதிக்க ஏப்ரல் 16ஆம் தேதி திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடியோ, முதல்வர் பழனிச்சாமியோ தயாராக இல்லை என்பதால் எதிர்கட்சியான திமுக சார்பில் வரும் ஞாயிறன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்துக்கான அழைப்பை ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் அனுப்பப்பட்ட உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுக சார்பில் காவிரி பிரச்சினைக்காக கடந்த ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு விவசாயிகள் பிரச்சினைக்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் 30 நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஞாயிறன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பருவமழை பொய்த்துப்போனதால் ஆறுகள் வறண்டு விட்டன. அணைகளில் நீர்மட்டம் அதளபாதாளத்திற்குப் போய்விட்டது. டெல்லியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் பிரதமர் மோடியோ, முதல்வர் பழனிச்சாமியே விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் மனநிலையில் இல்லை.
எனவே வலுவான எதிர்கட்சியாக உள்ள திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.