குஷ்புவால் காங்கிரஸுக்கு ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்
திருச்சி: சினிமா பிரபலங்களால் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று குஷ்பு காங்கிரஸில் சேர்ந்தது பற்றி தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
ஜி.கே. வாசனின் புதிய கட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் திருச்சி வந்துள்ளார். அப்போது அவரிடம் நடிகை குஷ்பு காங்கிரஸில் சேர்ந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,
சினிமா நடிகர், நடிகைகளை மக்கள் படத்தில் பார்த்து ரசிக்க விரும்புகிறார்கள். ஆனால் அந்த செல்வாக்கை வாக்கு வங்கியாக மாற்றுவது எளிதான விஷயம் அல்ல. இது 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நிரூபணம் ஆனது.
அந்த தேர்தலில் ஸ்ரீதேவி அவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்ட சிவகாசி உள்பட 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியை தான் தழுவியது.
எம்.ஜி.ஆர். சினிமாவில் அரசியல் கருத்துக்களை கூறி அப்போதே அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுவிட்டார். அதற்கேற்ப தனது ரசிகர்களையும் தயார்படுத்தினார். அவர் ஜெயலலிதாவையும் அரசியலில் வளர்த்துவிட்டார். அதனால் ஜெயலலிதாவுக்கு வெற்றி பெறுவது எளிதாக இருந்தது.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்காக பிரச்சாரம் செய்தாரே, என்ன ஆனது. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் வழியில் நடத்தி ஆரம்பத்தில் திமுகவுக்கு உதவினார். பின்னர் அவரே தனியாக ஒரு கட்சியை துவங்கினார். மூப்பனார் ஆதரவாளர்கள் காங்கிரஸிலேயே இருப்பதால் வாசனின் புதிய கட்சிக்கு பாதிப்பு இல்லை. 100 தலைவர்கள் இருந்தாலும் தொண்டர்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.