நாங்கள் பேசினால் 1 நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது! எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை!
சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமாக அறிக்கை வருமாறு;

ஊரெங்கும் ஊழல்: அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் "ஊரெங்கும் ஊழல்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.
தினமும் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற பாணியில், முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்துவிட்டு - அதிமுக ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.
அரைவேக்காட்டுப் புகார்: முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு அரைவேக்காட்டுப் புகார் கொடுக்கிறார். இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப, தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க "பேரணி" "புகார்" "அறிக்கை" என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

"முதலீடு" என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிச்சாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.
அசிங்கமான அரசியல்: அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?
கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை!அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

உலகச் சுற்றுலா மாநாடு: 2015-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு "அதிமுக மாநாடு"! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!
போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனக் "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி திரு. பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு!
இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிக்கைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக - அவதூறாக - கீழ்தரமாகப் பேசி - அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
காலில் விழுந்து கும்பிட்டு: எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்து"; அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது என அனைத்திலும் "கரன்சி பெட்டிகளை" கொடுத்து, தங்கக் கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்திளைப் படித்து அப்போதே ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்பியதை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.

தகுதி இல்லை: முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற "பெட்டி பெட்டியாக" பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட "கான்டிராக்ட் ஊழல்" அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை.
நிம்மதியாக இருக்க முடியாது: இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல, பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள், தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி பாணியிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications