ஹரியானாவில் கம்பளி தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ: 7 தொழிலாளர்கள் பலி
ஹரியானாவில் கம்பளி தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் பலியாகினர்.
பானிபட்: ஹரியானாவில் கம்பளி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கோகத் கிராமத்தில் கம்பளி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இன்று பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென சுற்றிலும் பரவியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.