பிளாஷ்பேக் 2015: உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்கள்
சென்னை: 2015ம் ஆண்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். வங்கிகளை கொள்ளையடிப்பது, பெண்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்வது என்று பல செய்யக் கூடாத செயல்களை செய்து சம்பாதிக்கிறார்கள்.
இந்நிலையில் 2015ம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய சில பயங்கர தாக்குதல்கள் உலகையே அதிர வைத்தது. மேலும் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இருவர் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடத்திய தாக்குதலையும் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.

சார்லி ஹெப்டோ
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி புகுந்த 2 சகோதரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 11 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அல் கொய்தாவின் ஏமன் கிளையுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிரியா
கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சிரியாவில் உள்ள கோபேன் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள ப்ரக் பூதன் கிராமத்திற்குள் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தியும் அப்பாவி பொதுமக்கள் 145 பேரை கொன்றனர்.

ஈராக்
ஈராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் உள்ள கான் பானி சாத் நகரில் ரம்ஜான் பண்டிகை அன்று மார்க்கெட்டில் வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக்கில் வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த தாக்குதலில் 120 பேர் பலியாகினர், 140 பேர் காயம் அடைந்தனர்.

ரஷ்ய விமானம்
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு கிளம்பிய விமானம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி சினாய் மாகாணத்தில் நடுவானில் இரண்டாக உடைந்து தரையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தை தாங்கள் சுட்டதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர்.

பாரீஸ் தாக்குதல்
கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு, தற்கொலைப் படை தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். அதில் 89 பேர் இசை நிகழ்ச்சி நடந்த படாகிளான் தியேட்டரில் நடந்த தாக்குதலில் பலியானார்கள். தாக்குதல்களை நடத்திய 7 தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது.












Click it and Unblock the Notifications