மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம்
குற்றாலம்: குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
மலைப் பகுதியில் கனமழை பெய்வதால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு என தகவல் தெரியவந்துள்ளது. மேலும் பழைய குற்றாலம், செண்பகாதேவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது. இரவு முழுவதும் சாரல் மழை, பகல் நேரங்களில் இதமான வெயில் குளுகுளு காற்று என இதமான சீசன் நிலவுகிறது.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றால அருவிகளின் குளித்து மகிழ பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால், கேரள மாநிலத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அவ்வப்போது சாரலுடன் கனமழையும் பெய்து வருகிறது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால் பயணிகள் குதூகலத்துடன் குளித்து வருகின்றனர்.
மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இன்று காலையில் திடீரென மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அருவி உள்ள பகுதிகளின் அருகில் சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால், மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பயணிகள் தூரத்தில் நின்றவாறு மெயின் அருவியில் வெள்ளமாக கொட்டும் தண்ணீரின் அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.