மத்தியக் குழு வருகை எதிரொலி... வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணி துரிதம்
சென்னை: தமிழக மழை, வெள்ள சேதாரத்தை நேரில் பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. இதையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் துய்மைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இன்னும் முடிவடையவில்லை. ஆனால், பாதி கிணறு தாண்டுவதற்குள்ளாகவே பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது தமிழகம். தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக மழை, வெள்ள சேதாரத்தை நேரில் பார்வையிட 9 பேர் கொண்ட மத்திய அரசின் உயர்மட்ட குழு நேற்று நள்ளிரவில் சென்னை வந்தது.
மத்தியக் குழு...
உள்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த டிவிஎஸ்.என்.பிரசாத் தலைமையிலான இக்குழுவில், உள்துறை, நிதித்துறை மற்றும் விவசாய துறையைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நேரில் ஆய்வு...
இக்குழு இன்று சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கிறது.
சுகாதாரப் பணிகள்...
மத்தியக் குழு ஆய்வு நடத்த உள்ளதால், வெள்ளம் பாதித்த குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. சாலைகளின் இருபக்கங்கள் மற்றும் நீர் தேங்கியுள்ள இடங்களில் குளோரின் தெளிக்கப்பட்டு வருகிறது.
குப்பைகள் அகற்றம்...
சாக்கடைகளில் உள்ள அடைப்புகள் அவசர கதியில் நீக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சாலையில் தேங்கிய குப்பைகள், மழையில் விழுந்த மரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.
நடமாடும் மருத்துவமனைகள்...
இதுதவிர நடமாடும் மருத்துவமனைகள், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் போன்றவையும் மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.