தலைவிரி கோலம் கூடாது... செல்போன், ராகிங் கூடவே கூடாது... நர்சிங் மாணவிகளுக்கு எச்சரிக்கை
திருநெல்வேலி: நர்சிங் படிக்கும் மாணவிகள் தலைவிரி கோலத்துடனோ, நைட்டி அணிந்து கொண்டோ ஹாஸ்டல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிய நர்சிங் பட்டபயிற்சி படிப்புக்கான வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவிகள் செல்போன் வைத்திருக்க கூடாது ராகிங் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 26 கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.
2015-2016ம்கல்வி ஆண்டுக்கான செவிலியர் பட்டப்படிப்பு கலந்தாய்வு முறையில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி அவுட்டோரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளின் கல்வி,வயது, ஜாதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. மருத்துவ கல்லூரி டீன் சித்தி அத்திய முனைவரா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாணவிகள் பயிற்சி பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.
செல்போன், நகைகள், ரேடியோ, மின் அடுப்பு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்திருக்ககூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். சக மாணவிகளை ராகிங் செய்ய கூடாது. அறையை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் சேலை அணிந்து வர வேண்டும். பணிக்கு வரும்போது சீருடை,காலனிகளை ஓழுங்காகவும், சுத்தமாகவும் அணிந்து வர வேண்டும். சாப்பிட செல்லும் போது தலை பின்னலுடன்தான் சாப்பிட செல்ல வேண்டும். பணி நேரத்தில் வார்டில் அமர கூடாது. ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு செல்ல கூடாது. ஜன்னல் ஓரம் இருந்து கீழே யாரிடமும் பேச கூடாது. பயிற்சி காலத்தில் எக்காரணம் கொண்டும் வேலை நிறுத்தம் செய்யவோ, கலந்து கொள்ளவோ கூடாது என 26 கடுமையான அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன.
புதிய வகுப்புகள் குறித்து டீ்ன் கூறுகையில், ரேங்க் அடிப்படையில் 100 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதில் சிறப்பு ஓதுக்கீட்டின் அடிப்படையில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி நல்ல முறையில் முடித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.