அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்க்கு 'லேகியம்'!: ஜெ. அறிவிப்பு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்", வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை விதி 110-ன் கீழ் வாசித்த முதல்வர்:
"அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்", குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம் ஆகியன இருக்கும்.

பிரசவித்த தாய்க்கு லேகியம்
பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும்.

ரூ.67 கோடி
நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு 67 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்" என்றார்.

ஊக்கத்தொகை உயர்வு
அரசு மருத்துவமனை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களின் ஊக்கத்தொகையை உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

4088 பயிற்சி மருத்துவர்கள்
தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்கள், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்கள், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்கள், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்கள் என 4,088 பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கால உதவித் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவித்தொகை
அவர்களின் கோரிக்கையினை ஏற்று, பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை 8,500 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 20,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாயாகவும், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், உயர்த்தப்படும்.

நரம்பு அறுவை சிகிச்சை
இரண்டாம் ஆண்டிற்கு 19,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 21,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 23,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை நான்காம் ஆண்டிற்கு 21,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஐந்தாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஆறாம் ஆண்டிற்கு 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

ரூ.28 கோடி
இது தவிர, பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்டு உதவித் தொகை உயர்வு 400 ரூபாய் எனவும், முதுநிலை மருத்துவர்களுக்கு 700 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications