டிஜிபி to டிஎன்பிஎஸ்சி to அதிமுக to வீட்டுக்கு.. ஆர். நடராஜின் சோகப் பயணம்!
சென்னை: தமிழகத்தின் நேர்மையான காவல்துறை அதிகாரிகளாக அறியப்பட்ட சிலரில் ஆர். நடராஜுக்கும் ஒரு தனி இடம் உண்டு. ஆனால் இன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு அசிங்கப்பட்டுப் போய் நிற்கிறார் நடராஜ்.
காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல் இலக்கியவாதியாக, கலாரசிகராக, இசை ரசிகராகவும் அறியப்படுபவர் ஆர். நடராஜ். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அரசியல் கறையை எடுத்து தன் மீது பூசிக் கொண்டவர் இன்று அதே கறையால் களங்கப்பட்டு நிற்கிறார்.
ஒரு வருடம் கூட இவரால் அதிமுகவில் நீடிக்க முடியவில்லை. காரணம், அதிமுக தலைமையின் "சகிப்புத்தன்மை இன்மை". எதார்த்தமாக பேசப் போய் என்று எடுத்து வெளியே வீசப்பட்டு விட்டார் நடராஜ்.

நெல்லையிலிருந்து
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் என்ற ஊரில் பிறந்தவர் நடராஜ். எம்.எஸ்.சி இயற்பியல் படித்தவர். நெல்லையிலும், சென்னை பல்கலைக்கழகத்திலுமாக தனது படிப்பை முடித்தவர்.

1975 முதல்
1975ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். முதலில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியவர்.

சீவலப்பேரி பாண்டியன்
நெல்லை மாவட்டத்தை அப்போது கலக்கிக் கொண்டிருந்தவர் சீவலப்பேரி பாண்டியன். இவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இந்த நிலையில்தான் அங்கு எஸ்.பியாக நியமிக்கப்பட்டார் நடராஜ். இவரது தலைமையிலான படை சீவலப்பேரி பாண்டியனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது.

வீரப்பன் வேட்டை
அதேபோல சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையிலும் புதிய உத்திகளைக் கையாண்டு வீரப்பனைச் சுற்றிலும் இருந்த ஆட்களைக் குறைக்க உதவினார் நடராஜ். வீரப்பன் வேட்டையில் முக்கியப் பங்கு வகித்தவர் நடராஜ்.

சென்னை போலீஸ் கமிஷனர்
2003ம் ஆண்டு முதல் 2006 வரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். இறுதியாக அவர் சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2011ம் ஆண்டு ஓய்வு பெற்றார் நடராஜ்.

டிஎன்பிஎஸ்சி தலைவர்
பதவியில் இருந்தபோது பெரிய சர்ச்சைகள் எதிலும் சிக்கியதில்லை. ஆனால் அதிமுக அனுதாபியாக செயல்படுவதாக கூறப்பட்டதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் 2011ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 2012ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். 2013 மார்ச் 12 வரை இப்பதவியில் நீடித்தார்.

அதிமுகவில் ஈடுபாடு
அதன் பின்னர் கடந்த ஆண்டு அதிமுகவில் முறைப்படி இணைந்தார். ஆனால் பதவி ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அதிமுக அரசின் அதிகாரிகளை குறை கூறிப் பேசி சர்ச்சையில் சிக்கி கட்சியை விட்டே டிஸ்மிஸ் ஆகியுள்ளார் நடராஜ்.












Click it and Unblock the Notifications