அதிமுக அரசு மூழ்கும் கப்பல்...அதை காப்பாற்ற முடியாது- ப.சிதம்பரம் ஆருடம்
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருப்பது அப்பட்டமான பாகுபாடு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருப்பது மைனாரிட்டி தமிழக அரசை காப்பாற்ற செய்த பாகுபாடு என்று ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று தினகரன் தரப்பும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வந்தன. இந்நிலையில் அரசுக்கு பங்கம் வராமல் இருப்பதற்காக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் சபாநாயகர் தனபால்.
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார் சபாநாயகர்.
சபாநாயகரின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபாநாயகரின் முடிவு குறித்து டுவிட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது :
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் முடிவு பாரபட்சமானது என்றும் மைனாரிட்டி தமிழக அரசை காப்பாற்றுவதற்காக எடுத்த முடியு என்பது அப்பட்டமாக தெரிகிறது. மூழ்கும் கப்பலை எதைச் செய்தாலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.