கடன்தொல்லையால் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை
கடன்தொல்லை காரணமாக திருப்பூரில் பனியன் கம்பெனி அதிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்: திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் 40. இவர், 100க்கும் மேற்பட்டோரை பணியமர்த்தி பனியன் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தயார் செய்யும் கார்மெண்ட்ஸ்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகக் கூடியவை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முத்துராஜுக்கு தொழிலில் சரிவர லாபம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கி தொழில் செய்தார். எனினும் லாபமும் கிடைக்கவில்லை, வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவும் முடியவில்லை. கடன் கேட்டவர்களின் நெருக்கடி அதிகமாக ஆரம்பிக்கவே கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில் முத்துராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், வாயில் நுரை தள்ளியபடி முத்துராஜ் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.