கடலை மிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி: அங்கன்வாடி குழந்தைகளும் இனி கொழு கொழு ஆகும்!
சென்னை: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி உணவு முட்டையுடன் கடலைமிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி போன்ற சத்தான உணவுப் பொருட்கள் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அங்கன்வாடி குழந்தைகளும் இனி சத்தாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சூடான சத்துணவு
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினமும் சூடாக சமைத்த அரிசி சாதத்துடன், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது.

கொண்டைக் கடலை - பச்சைப் பயறு
செவ்வாய்க்கிழமைகளில், வேகவைத்த கறுப்பு கொண்டைக் கடலை, பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் வேகவைத்த உருளைக்கிழங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வாரத்தில் 5 வேலை நாட்களிலும், முட்டை, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது.

30 வருஷமா ஒரு சாப்பாடா
கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு வழங்கப்படுவதால், குழந்தைகள் சலிப்படைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு புதிய வகையிலான, விதவிதமான கலவை சாதம், மசாலா முட்டை தினமும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஜெ. தீவிர பரிசீலனை
பரீட்சார்த்தமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒரு வட்டாரத்தில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா பரிசீலனை செய்து வருகிறார்.

அப்பப்ப வெயிட் பாருங்கப்பா...
ஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எடையை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின் பேரில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

பெரம்பலூர், அரியலூரில் எடை குறைவு
அதன்படி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள குழந்தைகள் எடை பார்க்கப்பட்டனர். அப்போது, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

புரதத்தை அதிகரியுங்கள்...
முதல்வர் ஜெயலலிதா, இதுபோன்ற எடை குறைவான குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் 250 கலோரி அளவு சத்து நிறைந்ததாக அது இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கடலை மிட்டாய் - பர்பி
அதன்பாடி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி ஆகியவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த பர்பி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications