புதிய கட்சி மாநில பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்: ஜி.கே.வாசன்
சென்னை: தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு தமது புதிய கட்சி முன்னுரிமை அளிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் கூறியதாவது:
பத்திரிகையாளர் நண்பர்களை நேற்று முன்தினம் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் சில செயல்பாடுகள் குறித்து தமிழகத்தில் உள்ள முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள் என்னை சந்தித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்தும் அவர்களது கருத்தை கேட்டு வருகிறேன். அனைவரது கருத்தைக் கேட்ட பிறகு எங்களுடைய முடிவை அறிவிக்க இருக்கிறேன் என்று கூறியிருந்தேன். இதனடிப்படையில் காமராஜர், மூப்பனார் வழிகாட்டுதல், ஆசியின் மூலம் வளமான தமிழகம்- வலிமையான பாரதம் என்ற கொள்கை மூலம் புதிய இயக்கத்தைக் காண இருக்கிறோம்.
தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை கொடுக்கு,ம் வகையில் எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம். மாநில பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு ஜனநாயகத்தில் இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கும் வகையில் புதிய இயக்கம் தமது பணியை தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த வெற்றிப் பாதையை மனநிறைவோடு தொடங்கியுள்ளோம்.
நாங்கள் இருந்த இயக்கத்தின் நோக்கமும் எங்களது நோக்கமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள் வேறாகவே இருக்கும்.
புதிய விடியலை, அரசியல் கலாசாரத்தை தேடும் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பை இந்த புதிய இயக்கம் பூர்த்தி செய்யும். ஜனநாயகம், மதச்சார்பற்ற அரசியல், எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, திறந்த நேர்மையான அரசு நிர்வகாம் இதுவே எங்கள் நோக்கம்
இதனடிப்படையில்தான் இந்த புதிய இயக்கம் உதயமாகி இருக்கிறது; இன்று தொடங்கப்பட்ட புதிய இயக்கத்தின் பெயரும் கொடியும் விரைவிலே திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறோம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றுள்ள இளங்கோவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை மீண்டும் அழைத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications