சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் போக இனி ரூ. 303 கொடுக்கணும்...
சென்னை: மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பின் படி சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட நகரங்களுக்கு இரண்டாம்வகுப்பு தூங்கும் வசதிக்கான கட்டணம் ரூ23 முதல் ரூ45 வரை உயர்ந்துள்ளது. இதன்படி இனி மதுரைக்கு ரூ.303 கொடுத்துதான் இரண்டாம்வகுப்பு பெட்டியில் பயணம் செய்யமுடியும். மூன்றடுக்கு ஏசி பெட்டிக்கான கட்டணம் சென்னையில் இருந்து மதுரைக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.765 ஆக உயர்ந்துள்ளது.
ரயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனவும், வரும் புதன்கிழமை முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சென்னை டூ குமரி
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக்கான (ஸ்லீப்பர் கிளாஸ்) தற்போதைய அடிப்படைக் கட்டணம் ரூ.316-ம், முன்பதிவுக் கட்டணம் ரூ.20-ம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் ரூ.30-ம் ஆக மொத்தம் ரூ.366 வசூலிக்கப்பட்டது.
இப்போது அடிப்படைக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால் (ரூ.31.60), அத்தொகையையும் சேர்த்து ரூ.397.60 வசூலிக்கப்படும்.
ஏசி பெட்டி கட்டணம்
மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னையில் இருந்து குமரிக்கு பழைய கட்டணம் ரூ.960 அது தற்போது 1044.10 பைசாவாக உயர்ந்துள்ளது.
தென்னக நகரங்கள்
அதே போல திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களுக்கான இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக் கட்டணம் 340 ரூபாயில் இருந்து 369 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏசி பெட்டிக்கான கட்டணம் 880ரூபாயில் இருந்து 956.40 பைசாவாக உயர்ந்துள்ளது.
மதுரை, கோவைக்கு எவ்வளவு?
மதுரை, கோவைக்கு தற்போது 280 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது., கட்டண உயர்வுக்குப் பின்னர் ரூ.303 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புக் கட்டணம் மதுரைக்கு 710 ரூபாயில் இருந்து 765 ரூபாயாகவும், கோவைக்கு 770 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
திருச்சி, சேலம்
திருச்சிக்கு இரண்டாம் வகுப்புக்கட்டணம் ரூ.190 லிருந்து 201 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி பெட்டிக்கு கட்டணம், 510 ரூபாயில் இருந்து 544.20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ345ல் இருந்து ரூ.374.50 ஆக அதிகரித்துள்ளது. ஏசி வகுப்புக் கட்டணம் 890ல் இருந்து 967.30 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூ.900 கோடி இழப்பு
தற்போது பயணிகள் பிரிவில் மட்டும் மாதமொன்றுக்கு சராசரியாக ரூ.900 கோடி இழப்பை ரயில்வே துறை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வட இந்திய நகரங்கள்
இனி சென்னையில் இருந்து டெல்லிக்குரூ.648க்கு பதிலாக ரூ.748.50 செலுத்த வேண்டும். அதேபோல ஏசி கட்டணமும் ரூ. 1937.70 ஆக உயர்ந்துள்ளது.
மும்பைக்கு எவ்வளவு?
மும்பைக்கு ரூ500 ஆக இருந்த இரண்டாம்வகுப்பு படுக்கைக் கட்டணம் ரு.515 ஆகவும், ஏசி வசதி பெட்டிக்கான கட்டணம் ரூ. 1305ல் இருந்து ரூ 1377.50 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.8000 கோடி வருவாய்
இந்த கட்டண உயர்வின் மூலம், ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயணிகள் பிரிவில் மட்டும் மாதமொன்றுக்கு சராசரியாக ரூ.900 கோடி இழப்பை ரயில்வே துறை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.