குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே தீப்பிடித்துக் கொண்ட அரசு பஸ்... பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னை குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே அரசுப் பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. துரிதகதியில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று காலை பூந்தமல்லியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு அரசு நகரப் பேருந்து கோவளம் நோக்கிக் கிளம்பியது. குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே இந்தப் பேருந்து வந்தபோது என்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியது.
இதைப் பார்த்த டிரைவர் சிவா பேருந்தை நிறுத்தி விட்டார். பயணிகளும் வேகமாக கீழே இறங்கி விட்டனர். தாம்பரம் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் பறந்தது. அவர்களும் படு வேகமாக விரைந்து வந்தனர். வந்த வேகத்தில் தீயை அணைத்து விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக தீ டீசல் டேங்க் வரை பரவாமல் தடுக்கப்பட்டு விட்டது. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். இந்த விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
என்ஜினில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications