ஓ.பி.எஸ்ஸின் "புன்னகை முகத்தை" இந்த வருடம் அரசு ஊழியர்கள் பார்க்க முடியாமப் போயிருமோ?
சென்னை: ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு காலண்டர் கொடுப்பார்கள், டைரி கொடுப்பார்கள். ஆனால் இந்த வருடம் அதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாகி விட்டது.
காரணம், முதல்வர் படத்தைப் போட்டுத்தான் காலண்டர், டைரி அடிக்கும் அரசு. ஆனால் முதல்வர் பதவியில் இருப்பதாக காட்டிக் கொள்ளவே ரொம்பத் தயங்கித் தயங்கி செயல்பட்டு வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். அரசு விழாக்கள் கூட பன்னீர் செல்வம் தலைமையில் நடப்பதில்லை. அப்படியே ஏதாவது அரசு விழா நடந்தாலும் கூட ஓ.பன்னீர் செல்வம் முதன்மைப்படுத்தப்படுவதில்லை.

அதிகாரிகள் கூட்டத்திலும் கூட ஜெயலலிதா படத்தைத்தான் தூக்கி முதலில் டேபிளில் வைத்துக் கொள்கிறார் பன்னீர் செல்வம். அவர் வெளியிடும் அறிக்கைகளிலும் கூட "அம்மா" புகழ்தான் மேலோங்கி நிற்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தனது படத்தைப் போட்டு எப்படி காலண்டர், டைரி அடிக்க பன்னீர் செல்வம் அனுமதிப்பார் என்று தெரியவில்லை. கனவில் கூட இது நடக்காது என்றே தெரிகிறது. எனவே இந்த ஆண்டு காலண்டர், டைரி வருமா என்பது சந்தேகமாகியுள்ளது.
அதேசமயம் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் காலண்டரை அடித்து ஊழியர்கள் கையில் கொடுத்து விட்டனர். அதில் அந்தந்த துறை தொடர்பான படங்களும், விவரங்களும் மட்டுமே உள்ளனவாம். முதல்வர், அமைச்சர் என யார் படமும் இல்லை.
டைரிதான் தற்போது இடிக்கிறது. அதை அடித்துக் கொடுப்பார்களா அல்லது அப்படியே லூஸில் விட்டு விடுவார்களா என்றுதான் தெரியவில்லை.
2002-ம் ஆண்டும் இதே மாதிரியான சிக்கல்தான். அப்போதும் ஜெயலலிதா பதவியை இழந்து, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். 2002 ஜனவரியில் முதல்வராக பன்னீர் இருந்தார். அதனால் டைரியும் காலண்டரும் அச்சிடவில்லை. மார்ச் மாதம் ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகுதான் மூன்று மாதங்கள் கழித்து காலண்டர் போட்டார்கள். அந்த மூன்று மாத காலமும் காலண்டர், டைரி இல்லாமலேயே பல அலுவலகங்கள் செயல்பட்டன. ஆனால் தற்போது என்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே குழப்பம் நிலவுகிறது.
இதெல்லாம் மேட்டரே கிடையாது, முதலில் இந்த வருஷம் ஜனவரி 1ம் தேதி தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லவே இல்லை ஓ.பன்னீர் செல்வம்.. அதேபோல ஜெயலலிதாவும் சொல்லவில்லை!












Click it and Unblock the Notifications