மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கோரும் ஆம் ஆத்மி கட்சி
சென்னை: தமிழகத்தில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சத்தை நிவாரணத்தொகையாக உடனடியாத தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் கடலூர், நெய்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளை நிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீர், நெற்பயிர் உள்ளிட்டவற்றுக்கு முழுச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்கு இதுவரை கிட்டதட்ட 150 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பொருள்களை அளிப்பதிலும் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் கிலோ அரிசி, கோதுமை, ரொட்டி, உடைகள், மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கட்சியினரால் வழங்கப்பட்டுள்ளன.
மழையால் பலியான குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சத்தையும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரத்தையும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும், வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications