திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை பெரியார் சிலை... எச்.ராஜா வன்முறைப் பதிவு!
திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார். எச். ராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொடர்ந்து ஆட்சி செய்வதை கொண்டாடும் விதமாக 2013ல் லெனின் சிலையை நிறுவினர். ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய இரண்டாவது நாளே மார்க்சிஸ்ட் ஆட்சியின் தொடர் வெற்றி அடையாளமான லெனினின் சிலையை அகற்றியுள்ளனர்.
அந்த சிலையை பாஜகவினர் இன்று காலையில் அகற்றியுள்ளனர். பாரத் மாதா கி ஜே என்று சொல்லி பாஜக தொண்டர்கள் லெனினின் சிலையை ஜேசிபி எந்திரம் வைத்து அகற்றியுள்ளனர். அந்த மாநில பாஜக செயலாளர் ராம் மாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து புகைப்படத்துடன் கருத்தை பதிவிட்டு பின்னர் அதனை அழித்தார்.

லெனின் சிலை அகற்றம் பற்றி கேள்வி
இந்நிலையில் தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா முகநூலில் லெனின் சிலை உடைப்பு குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் சிலை உடைக்கப்படும்
கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை என்றும் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரை விமர்சிக்கும் ராஜா
அண்மைக்காலமாக தமிழகத்தை திராவிட மண், பெரியார் மண் என்று திரும்பத் திரும்ப தனது கருத்துகளில் கேலி செய்யும் விதமாகவே குறிப்பிட்டு வருகிறார் எச். ராஜா. இந்நிலையில் திரிபுராவில் நடந்ததை தமிழகத்தோடு முடிச்சிபோட்டு ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

குவியும் கண்டனங்கள்
எச். ராஜாவின் இந்த கருத்துக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எச். ராஜா தொடர்ந்து தன்னுடைய பதிவுகளில் பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications