விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணை குறித்துப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக் கோரி சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் விஷ்ணு பிரியா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி வலியுறுத்தி உள்ளார். விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அவர் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், விஷ்ணுபிரியா தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாநில போலீசார் மீது புகார்கள் எழுந்துள்ளதால் அவர்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல. எனவே அவர்களது விசாரணைக்கு தடை விதித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள், சிபிஐ விசாரணை தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை பைசல் செய்தனர்.












Click it and Unblock the Notifications