ஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து.. கலெக்டருக்கு ஹைகோர்ட் சரமாரி குட்டு
Recommended Video
மதுரை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர், ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை மதுரை ஹைகோர்ட் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. நேரில் ஆஜரான தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு, நீதிபதிகள் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிராகவன். வழக்கறிஞர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, போராட்டம் நடத்தியதால் காவல்துறை 92 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஹரிராகவனை கைது செய்த காவல்துறை, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். ஹரிராகவனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவர் மனைவி சத்யபாமா கடந்த 20ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சுவாமிநாதன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
24ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு நகலை எடுத்துக்கொண்டு 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு சத்யபாமா சிறை நிர்வாகத்திடம் உத்தரவை கொடுத்தநிலையில், மாலை ல் 6.10 மணிக்கு ஹரிஹரன் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில் சத்யபாமா நேற்று தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் மீது புதிதாக பதியப்பட்ட தேச பாதுகாப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் பஷீர் அஹமது தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோபமடைந்த நீதிபதிகள், தமிழகத்தில் போலீஸ் ஆட்சி நடக்கிறதா, ஜனநாயக ஆட்சி நடக்கிறதா, மாவட்ட கலெக்டர் எப்படி இதற்கு சம்மதித்தார் என கேள்வி எழுப்பி, மாவட்ட கலெக்டர், புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஹைகோர்ட் கிளையில் இன்று நேரில் ஆஜராகினார்.
இதையடுத்து இன்று சந்தீப் நந்தூரி, ஹைகோர்ட்டில் நேரில் ஆஜரானார். 20ம் தேதியே தேசபாதுகாப்பு சட்டத்தை, ஹரிராகவன் மீது போட நடவடிக்கை துவங்கிவிட்டதாகவும், 26ம் தேதி அந்த நடவடிக்கை முடிவுற்றதாகவும் விளக்கம் அளித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் என்பவர் அந்த மாவட்டத்தின் முதல் குடிமகன். உயர்நீதிமன்ற உத்தரவை கருத்தில் எடுக்காமல் போலீஸ் கொடுக்கும் ஆவணத்தில் கையெழுத்திட கூடாது. முழுமையாக ஆய்வு செய்துதான், கையெழுத்திட வேண்டும், முறையான ஆய்வு இன்றி எவரையும் கைது செய்ய கூடாது, என்று கலெக்டருக்கு அறிவுரை கூறினர். மேலும், ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.