சேலத்தில் குடிக்க பணம் கொடுக்காத 2வது மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர்
சேலம்: மது குடிக்க பணம் கொடுக்காத 2வது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலையை அடுத்து உள்ள வேடுகத்தான்பட்டியைச் சேர்ந்தவர் தனபால்(45). அவரது மனைவி சிவகாமி(40). அவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்த தனபாலுக்கு தன்னுடன் வேலை செய்த பழனியம்மாள்(40) என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பால் பழனியம்மாள் தனது கணவர் சித்தன், மகன், மகள் ஆகியோரை விட்டுவிட்டு வந்து தனபாலுடன் சேர்ந்து தனியாக குடித்தனம் நடத்தினார். அவருக்கு தனபால் மூலம் பார்த்திபன்(10) என்ற மகன் உள்ளான்.
குடிப்பழக்கம் உள்ள தனபால் குடிக்க பணம் கேட்டு பழனியம்மாளுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு குடிக்க பணம் கேட்டு தனபால் பழனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தனபால் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பழனிம்மாள் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார்.
உடலில் தீப்பற்றி எரிந்தபோது பழனியம்மாள் தனபாலை கட்டிப்பிடித்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தனபால் தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக பழனியம்மாள் வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனபாலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications