கிரானைட் குவாரிகளில் நரபலி: 7 பேருக்கு சம்மன்- எலும்புக்கூடுகளுக்கு சென்னையில் மரபணு பரிசோதனை
சென்னை: நரபலி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஆர்பி கிரானைட் நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சின்னமலம்பட்டியில் முதற்கட்டமாக தோண்டி எடுக்கப்பட 4 பேரின் எலும்புக்கூடுகளை மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்ப மதுரை போலீசுக்கு மேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் நரபலி கொடுக்கப்பட்டு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் புதைக்கப்பட்டதாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன முன்னாள் டிரைவர் சேவற்கொடியோன் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரின்பேரில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், உடல்கள் புதைக்கப்பட்டதாக சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டி பார்க்க உத்தரவிட்டார்.
8 எலும்புக்கூடுகள்
வருவாய் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சின்னமலம்பட்டியில் குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டது. இந்த குழியில் இருந்து ஒரு குழந்தை உள்பட 8 பேரின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. டி.என்.ஏ., சூப்பர் இம்போசிங் போன்ற சோதனைகளும் நடத்தப்பட உள்ளன.
விசாரணைக்கு ஆஜர்
இந்த நிலையில் நரபலி புகாரின் அடிப்படையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவன் ஆகியோருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 15, 16 மற்றும் 17ம்தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகினர். நரபலி புகார் கூறிய சேவற்கொடியோனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் 22ம்தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
7 பேருக்கு சம்மன்
அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனங்களில் வேலை பார்த்த லோகேஷ், முருகேசன், ராஜா, தனபால், ஹனுமந்தன், பழனிவேல், முருகானந்தம் அகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மரபணு சோதனை
இதனிடையே, சின்னமலம்பட்டியில் முதற்கட்டமாக தோண்டி எடுக்கப்பட 4 பேரின் எலும்புகள் மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மரபணு சோதனைக்காக அவை அனைத்தும் சென்னைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications