வாசனுக்காக எம்.எல்.ஏ. பதவியை தூக்கி எறியத் தயார்... ஜான் ஜேக்கப்
நாகர்கோவில்: ஜி.கே.வாசனுக்காக எனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் கூறியுள்ளார்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார் ஜேக்கப்.
பின்னர் ஜேக்கப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாங்களே அசந்து விட்டோம்
வாசன் முதலில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டு நாங்களே அசந்து விட்டோம். காமராஜர் ஆட்சிக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவில்லை.
மூப்பனார் தலைமையில்
1989-ல் மூப்பனார் தலைமையில் தனியாக தேர்தலை சந்தித்த போது 23 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 40 தொகுதிகளில் மிக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் 23 சதவீதம் ஓட்டுகள் பெற்றோம்.
யார்...!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஓட்டு சதவீதம் 4.3 சதவீதம். இந்த நிலைக்கு காங்கிரசை கொண்டு வந்தது யார்? தமிழக பிரச்னைக்காக வாசன் தொடங்கும் கட்சி மக்களின் அமோக ஆதரவை பெறும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறும்.
துரோகம் செய்த பிரின்ஸ்
எனக்கு இரண்டு முறை சீட் வாங்கி தந்ததால் நான் வாசன் தலைமையை ஏற்றுள்ளேன். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்சை மாவட்ட தலைவராகவும். எம்.எல்.ஏ.யாகவும் ஆக்கியவர் வாசன். அவருக்கு துரோகம் செய்த பிரின்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சண்டை போட மாட்டோம்
கட்சி அலுவலகத்துக்காக நாங்கள் சண்டை போடமாட்டோம். அமைதியை நாங்கள் விரும்புகிறோம்.
நான் ராஜினாமா செய்ய தயார்
வாசனுக்காக எதையும் செய்ய நான் தயாரக உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால்தான் வாசனின் புதிய கட்சியில் இணைய முடியும் என்றால் அந்த பதவியையும் ராஜினாமா செய்து விடுவேன் என்றார் அவர்.