சினிமாவுக்கு நான் எதிரி இல்லை.. சினிமா கலாச்சாரத்தை வெறுக்கிறேன்.. அன்புமணி ராமதாஸ்
சினிமா கலாச்சாரத்தை எதிர்ப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சினிமாவை எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாச்சாரத்தைத் தான் எதிர்க்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் பாட்டாளி மக்கள் ஆரம்பித்தது முதல், சமீப காலம்வரை நடிகர்கள் கட்சிக்குள் வரக்கூடாது என்றும், நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் பலமாக கூறி வந்தது.
ரஜினிகாந்த்-விஜயகாந்த்
இதற்காகவே டாக்டர் ராமதாசிடம் விஜயகாந்த், முதல் ரஜினிகாந்த் வரை வறுபட்டார்கள். மேலும் சினிமா போஸ்டர்கள் எந்த ஹீரோ சிகரெட் பிடித்த மாதிரி போஸ்டர் இருந்தாலும் அதற்கு எதிராகவும் கட்சியில் போர்க்கொடி தூக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய்யும் சிக்கியுள்ளார்.
அன்புமணி விளக்கம்
ஆனால் சமீபத்தில் நடிகர் ரஞ்சித்திற்கு புதிய மற்றும் பெரிய பொறுப்பு தரப்பட்டது. இதனால் நடிகர்களை பாமக ஏற்றுக் கொள்கிறதா, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா என்று பலதரப்பில் பேசப்பட்டது, சந்தேகம் எழுந்தது.ஆனால் இதற்கெல்லாம் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வேலூர் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி கூறியதாவது:
கட் அவுட் அபிஷேகங்கள்
நான் எப்போதுமே சினிமாவை எதிர்க்கவில்லை. சினிமா கலாச்சாரத்தைத் தான் எதிர்க்கிறேன். எந்த ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் அந்த ஹீரோவின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் முதல் பீர் அபிஷேகம் வரை ரசிகர்கள் செய்கிறார்கள். இதனைதான் நான் எதிர்க்கிறேன். இப்படி கட் அவுட்களில் ஏறி நின்று கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட அபிஷேகங்களை செய்வதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாமக எதிரானது இல்லை
இப்படி கட் அவுட் கலாச்சாரம் முற்றிலும் தவறான ஒன்று. அதனால் இது போன்ற கலாச்சாரம் சினிமாவில் இருக்கக் கூடாது என்றுதான் நான் சொல்லி வந்திருக்கிறேன். மற்றபடி சினிமாவை நான் எதிர்த்ததே கிடையாது. எனவே பா.ம.க.வினர் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவர்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.